தபால் துறை நடத்தும் பல்திறன் பணியாளர்கள் (Multi Tasking Staff), மெயில் கார்டு (Mail Guard), தபால்காரர் (Postman), அஞ்சலக உதவியாளர் (Postal Assistant), சார்டிங் அசிஸ்டெண்ட் (Sorting Assistant) போன்ற தபால் துறை பணியிடங்களுக்கான தேர்வுகளுக்கு வினாத்தாள் அந்தந்த மாநில மொழிகளில் வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது.
கடந்த மே 10ஆம் தேதி இந்த பணிகளுக்கான தேர்வுகளின் பாடத்திட்டத்தினை மாற்றி அமைத்தது. அத்துடன் இந்தி மற்றும் ஆங்கிலத்திலும், இந்தி மொழி பேசாத மாநிலங்களில் 23 மாநில மொழிகளிலும் வினாத்தாள்கள் அமையும் என்று அறிவித்திருந்தது.
ஆனால் இப்போது முதல் தாளுக்கான தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டாம் தாள் தேர்வுக்கான வினாத்தாள் ஆங்கிலத்திலிருந்து அந்தந்த மாநில மொழிகளில் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுவரை தபால் துறை வேலை வாய்ப்புகளுக்கு நடத்தும் தேர்வுகளில் அனைத்து தாள்களும் மாநில மொழிகளில் வழங்கப்படுவதை தற்போது மாற்றுகிறது மத்திய அரசு.