சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1967-ன் கீழ், சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்ட நீதிக்கான சீக்கியர்கள் (எஸ்எஃப்ஜெ) அமைப்புடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ள வெளிநாட்டைச் சேர்ந்த “பஞ்சாப் அரசியல் டிவி” என்னும் பெயரிலான, சமூக ஊடக கணக்குகள், வலைதளம், செயலிகளை முடக்க மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நடைபெற்று வரும் சட்டப்பேரவை தேர்தல்களின் போது, பொது ஒழுங்கை ஆன்லைன் ஊடகத்தை பயன்படுத்தி சீர்குலைக்க இந்த சேனல் முயன்று வருவதாக கிடைத்த புலனாய்வு தகவல்களின் அடிப்படையில், ஐடி விதிமுறைகளின் கீழ் அமைச்சகம் தனது அவசர கால அதிகாரத்தை பயன்படுத்தி, “பஞ்சாப் அரசியல் டிவி”-ன் டிஜிட்டல் ஊடக ஆதாரங்களை பிப்ரவரி 18-ந் தேதி முதல் முடக்க உத்தரவிட்டது.
தடைசெய்யப்பட்ட செயலிகள், வலைதளம், சமூக ஊடக கணக்குகளில் மதநல்லிணக்கத்தை சீர்குலைத்து பிரிவினைவாதத்தை தூண்டிவிடுவதற்கு உரிய அம்சங்கள் உள்ளதும், அவை இந்தியாவின் ஒருமைப்பாடு, இறையாண்மை, மாநிலத்தின் பாதுகாப்பு, பொது ஒழுங்கு ஆகியவற்றுக்கு தீங்குவிளைவிப்பதாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. தேர்தல்களின் போது ஆதாயம் பெறும் வகையில் புதிய செயலிகளும், சமூக ஊடக கணக்குகளும் துவக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் ஒட்டுமொத்த தகவல் சூழலை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு தொடர்ந்து விழிப்புடன் கண்காணித்து வருகிறது. மேலும், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் குலைக்கும் எந்த நடவடிக்கையையும் அரசு அனுமதிக்காது.