சுவாதி கொலை வழக்கு படத்தை சர்ச்சைக்காகவோ, சம்பாதிப்பதற்காகவோ இயக்கவில்லை. சமூக அக்கறையோடுதான் இயக்கியுள்ளேன் என்று இயக்குநர் ரமேஷ் செல்வன் தெரிவித்தார்.
‘சுவாதி கொலை வழக்கு’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி டிஜிபி அலுவலகத்தில் ஸ்வாதியின் தந்தை புதன்கிழமை புகார் மனு கொடுத்தார்.
இந்நிலையில் இன்று ‘சுவாதி கொலை வழக்கு’ படத்தின் இயக்குநர் ரமேஷ் செல்வன் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
”ராம்குமாரை குற்றவாளியாக சித்தரித்து படம் இயக்கவில்லை. சுவாதியை தவறாக சித்தரிக்கவில்லை. யாரையும் தவறாக சித்தரிக்கும் நோக்கத்தில் இப்படத்தை இயக்கவில்லை. சமூக அக்கறையோடுதான் ‘சுவாதி கொலை வழக்கு’ படத்தை இயக்கியுள்ளேன். ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் கற்பனையைப் புகுத்தவில்லை. எதையும் கூடுதலாக சேர்க்கவில்லை.
சுவாதி பெயரைப் பயன்படுத்தி சம்பாதிப்பதற்காகவோ, சர்ச்சைக்காகவோ படம் எடுக்கவில்லை. இன்னொரு சுவாதிக்கு இப்படி ஒரு நிலை வந்துவிடக் கூடாது என்பதற்காகவே படத்தை எடுத்துள்ளேன். படம் எடுத்து முடித்த பிறகு ராம்குமார் குடும்பத்துக்கும், சுவாதி குடும்பத்துக்கும், காவல்துறைக்கும் திரையிட்டுக் காட்டுவேன். அவர்கள் ஆட்சேபிக்கும் காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை வெளியிடுவேன்” என்றார்.